திருவனந்தபுரம் : கேரளாவில் 2 நாட்களில் 29 கர்ப்பிணிகளுக்கு
சிசேரியன் செய்த 4 டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கவேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் அரசுக்கு
பரிந்துரை செய்துள்ளார். கேரளாவில் ஆலப்புழா அருகே உள்ள
சேர்த்தலா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் விடுமுறையில்
செல்வதற்காக, பிரசவ தேதிக்கு முன்பே 29 கர்ப்பிணிகளுக்கு
சிசேரியன் செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை
ஏற்படுத்தியது. இது குறித்து, விஜிலென்ஸ் விசாரணை
தொடங்கியுள்ளது. மனித உரிமை ஆணையமும் வழக்கு பதிவு செய்து
விசாரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்
குமாரிபிரேமா, சேர்த்தலா அரசு மருத்துவமனையில் விசாரணை
நடத்தினார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தற்காலிகமாக ஒரு தகர கொட்டகையில்தான் கர்ப்பிணிகளுக்கு
சிசேரியன் செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் மட்டும் இந்த
மருத்துவமனையில் 600 சிசேரியன் செய்யப்பட்டுள்ளது. இங்கு
அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள், சிகிச்சை
அளிக்கும் டாக்டர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தால்
மட்டுமே நல்ல சிகிச்சை கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, 29 சிசேரியன் செய்த 3 பெண் டாக்டர்கள் உட்பட 4
டாக்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை இயக்குனர்
குமாரி பிரேமா, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.