நில அதிர்வை முன்கூட்டியே அறிய 8 கி.மீ ஆழத்திற்கு பூமியில் துளை!
சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் புஹுஷிமா நகரில் இயங்கிவந்த அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்களுக்கும் அவ்வகையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் ஜைட்டாபூர் அணுசக்தி நிலையத்திலிருந்து சுமார் 300 கி.மீ தூரத்தில் 8 கி.மீ ஆழத்தில் புவியதிர்வு ஆராய்ச்சி மேற்கொள்ள இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில புவியியல் துறை அமைச்சர் அஸ்வின் குமார் செய்தியாளார்களிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆழ்துளை திட்டங்களுக்கான அமைப்பின் துணையுடன் செய்யப்படும் ரூ.300 கோடி மதிப்பிலான இந்த ஆய்வு அடிக்கடி பூகம்பம் சாத்தியமுள்ள கொய்னா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பம் குறித்து முன்னறிவிப்பு எச்சரிக்கைகளுக்கு பூகம்பம் நிகழும் இடத்தின் துல்லியமான நேரம் மற்றும் மையப்பகுதிகளை அறிய வேண்டும். இவ்வாறான ஆழ்துளை ஆய்வின்மூலம் புவியடுக்கின் மத்தியில் நிகழும் அதிர்வுகளை ஓரளவு உணரமுடியும். முழுஆய்வையும் செய்துமுடிக்க 2 முதல் 5 ஆண்டுகளாகும் என்றாலும் முதற்கட்ட ஆய்வு முடிவை அடுத்த 8 மாதங்களுக்குள் அறியலாம் என்று அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆய்வு நடத்தப்பட உள்ள கொய்னா பிரதேசத்தில் பெருமளவிலான புவியதிர்வுகள் அடிக்கடி உணரப்படுவதால் விஞ்ஞானிகளுக்கு அதுகுறித்த ஆய்வுகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று கடந்த மாதம் ஐதராபாத்தில் கூடிய பிரபல புவியியல் வல்லுனர்கள் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளனர். இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்படும்.
"கொய்னா பிரதேசத்தைத் தேர்ந்ததெடுத்ததற்கான காரணம் என்னவெனில் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பங்களின் அதிர்வுகள் இப்பகுதியில் உணரப்பட்டதோடு, ஏனைய பகுதிகளைவிட இங்கு பதிவான தகவல்கள் தனித்தன்மை வாய்ந்தவையாகும்" என்று அமைச்சர் அஸ்வின் குமார் தெரிவித்தார்.