May 9, 2011
 

இந்தியாவையும் சீனாவையும் தொழில்நுட்பத்தில் வளர விடக்கூடாது - ஒபாமா!

"இந்தியா மற்றும் சீனாவிலிருந்து புதிய தொழில் நுட்பங்கள் வருவதையும் அதில் அவர்கள் வளருவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றதுமுதல் அவரது நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களாக இந்தியர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டு இன்னொரு பக்கம் இந்தியாவுக்கு எதிராகவும் அவ்வபோது அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துகளை வெளியிட்டுவருகிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றில் சீனாவுடன் போட்டிபோட்டுக்கொண்டு இந்தியாவும் முன்னேறுவது குறித்து அவர் அவ்வப்போது அமெரிக்கர்களை உஷார்படுத்தி வருகிறார்.

இண்டியானா மாகாணம் ஆலிசன் மின் நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் ஒபாமா பேசும்போது "அமெரிக்காவே எப்போதும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிலும் வளர்ச்சியில் முன்னோடியாக இருக்க வேண்டும். புத்தம்புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை அமெரிக்கர்களே அறிமுகப்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளுவதை நான் விரும்பவில்லை. அங்கிருந்து புதிய தொழில்நுட்பங்கள் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

ஜெர்மனி, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும்,உலகம் முழுவதும் நமக்குப் போட்டிகள் அதிகரித்துள்ளன. எனவே அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தனதுநாடு வல்லரசாகவே இருக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால், நட்பு நாடான இந்தியா அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று வெளிப்படையாகப் பேசி இருப்பது அமெரிக்க அதிபர்களின் தொடர் நிலைப்பாடாகவே ஆகிவருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.